எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாகக் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்பு காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகச் சுற்றாடல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், மொறட்டுவை எகொட உயன பிரதேசத்தில் கரையொதுங்கிய கடல் ஆமை ஒன்றின் உடல் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
ஆமையின் வயிற்றுப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதுடன், தலையிலும் காயம் காணப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட இடர் முகாமைத்துவ உதவி ஒருங்கிணைப்பாளர் அனுர கலங்சூரிய உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதுடன், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குக் கடல் ஆமையின் உடல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பேர்ள் கப்பல் காரணமாகக் கடற்பரப்பிற்குள் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்பு காரணமாக இந்த ஆமை இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் இதே பகுதியில் இறந்த கடல் ஆமையின் உடல் கரையொதுங்கியது.